2009இற்கு பின்னரான அரசியல் சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பில் பலரும் பல விதமாகப் பேசிவருகின்றனர். சீரசனுக்கு பறவைகள் படையெடுப்பது போன்று, பல கதைகள் கூறப்பட்டன. கூறப்படுகின்றன! பிரபாகரன் இருக்கின்றார் – நேற்றுத்தான் என்னோடு பேசியவர் என்று தமிழ் நாட்டு நெடுமாறன் கதைகள் சொன்னதிலிருந்து, இந்த நகைச் சுவை நீண்டு கொண்டே செல்கின்றது.
தலைவர் எனக்கு ஆமைக் கறி சமைத்து பரிமாறினார் என்று, சைமன் எனப்படும் சீமான், சினிமா வசனம் எழுத – உங்களுக்கு ஆமைக் கறிதான் சமைத்துத் தருவார் ஆனால், அவரது திருமணத்தின் போது எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொண்டார், அவர் காதலித்த போது அண்ணியார் மதிவதனியின் தந்தை எவ்வாறு நடந்து கொண்டார் என்பதைப் பற்றி என்னிடம் நீண்ட நேரம் பேசினார் – இப்படி, தொல் திருமாளவன் இன்னொரு திரைக் கதை எழுதினார். இப்படி பிரபாகரனை வைத்து ஏராளம் நகைச் சுவைக் கதைகள் புனையப்பட்டன. சினிமாவை பார்த்து தங்களுக்கான தலைவரையே தெரிவு செய்யும் தமிழ் நாட்டு மக்களுக்கு, இவ்வாறான கதைகள் நல்ல குதுகலமாகத்தானே இருக்கும்.
தமிழ் நாட்டில் நெடுமாறன் ஆரம்பித்து வைத்த, பிரபாகரனின் ஆவிக் கதைக்கு, புலம்பெயர் நாடுகளிலுள்ள சிலாரோ, தலை கால் எல்லாம் வைத்து, இன்னொரு திரைக் கதையை எழுதினர். அந்தக் கதை இப்போதும் ஒவ்வொரு மாவீரர் தினத்தின் போதும் காட்சிப் படுத்தப்படுகின்றது. அவ்வாறானவர்கள் பிரபாரகனுக்கு அஞ்சலி செலுத்துவதையும் எதிர்த்து வருகின்றனர். ஏன் இவ்வாறு செய்கின்றனர்? இதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கின்றது? நமாறியோம் பராபரமே? பொய்களால் மக்களை ஏமாற்றுவதன் மூலம் எதனைச் சாதிக்க முடியும்?
பிரபாகரன் போன்று, செயலில் நம்பிக்கையுள்ள ஒருவர், உலகில் எங்கோ ஒரு மூலையில் பதுங்கியிருக்கின்றார் என்பதே அவரை இழிபடுத்தும் செயல்தான்.
இவ்வாறான நகைச் சுவைகள் போதாது என்று, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது, புதிய திரைக் கதை ஒன்றிக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கின்றார். இந்தக் கதைக்கு யாரெல்லாம் வர்ணணை செய்யப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இறுதிவரையில் தனி நாட்டு இலக்கிற்காகவே போராடியிருந்தது – இதுதான் இதுவரையான உண்மை. ஆனால் பொன்னம்பலமோ, அப்படியில்லை என்கிறார். பிரபாகரன் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருந்ததாகக் கூறுகின்றார். அதனால்தான், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று வைக்கப்பட்டதாகவும் – அவர்களுடைய இலக்கு தனிநாடு என்றால் புலிகளின் தாகம் தமிழீழ தனியரசு என்றல்லவா வைத்திருப்பர் என்கிறார். ஆனால் பிரபாகரன் எந்தவொரு இடத்திலும் ஒரு நாடு இரண்டு தேசம் என்றோ, தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றோ கூறியதாக சான்றுகள் இல்லை. அவருடைய இலக்கான தனிநாட்டையே – புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று குறிப்பிட்டார். தேசம்தான் பிரபாகரனின் இலக்கு என்றால் புலிகளின் தாகம் தமிழர் தேசம் என்றோ அல்லது தமிழீழ தேசம் என்றுதானே கூறியிருக்க வேண்டும்?
விடயமறிந்த அனைவருக்கும் தெரியும் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் அவ்வாறானதொரு இணக்கத்திற்கான வாய்ப்பு இருந்தது. விடுதலைப் புலிகளின் தத்துவ ஆசிரியராக அறியப்பட்ட, அன்ரன் பாலசிங்கம் அதற்கு இணங்கியிருந்தார். ஆனால் பிரபாகரன் அதற்கு இணங்கவில்லை. இதனால் மனமுடைந்த பாலா, மனவருத்தத்துடனும் காலமான கதையையும் பலரும் அறிவார்.
புலிகளின் இறுதி அத்தியாயம் எழுதப்படப் போவதை ஊகித்துக் கொண்ட பாலா, இறுதியில் இந்தியாவை நோக்கியும் கையேந்திப் பார்த்தார். ஆனால் காலம் கடந்திருந்தது – இது வரலாறு. உண்மையில், பிரபாகரன் அவ்வாறானதொரு ஜக்கிய இலங்கைத் தீர்வுக்கு இணங்கியிருப்பாரானால் அவரும் தப்பி, அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்திருக்க முடியும். மக்களும் மடிந்திருக்கமாட்டார்கள். ஆனால் பிரபாகரன் இறுதி வரையில் தனிநாட்டு நிலைப்பாட்டில் சமரசம் செய்ய முயற்சிக்கவில்லை. இதனால்தான் யுத்தம் பேரழிவு ஒன்றுடன் முடிவுற்றது.
உண்மை இவ்வாறிருக்கின்ற போது, பிரபாகரன் தனிநாட்டுக்காகப் போராடவில்லை – அவர் “தமிழர் தேசம்” என்பதில்தான் உறுதியாக இருந்தார் என்று கூறுவது இதுவரையில் அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இழிவுபடுத்தல்களிலேயே உச்சமானது.
இதன் மூலம் பிரபாகரன் ஏற்றுக் கொண்ட தேசம் நிலைப்பாட்டைத்தான் தன்னுடைய கட்சி முன்வைத்து வருகின்றது – நாங்கள் மட்டுமே தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பவர்கள் என்று நிறுவுவதுதான் பொன்னம்பலத்தின் தீய நோக்கமாகும். தங்களுடைய கட்சி அரசியல் வியாபாரத்திற்காக பிரபாகரனை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றார். இது நியாயமானதா? யாருண்டு கேட்க?
