கோட்டபாயவிற்கு பயணத் தடை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர்களுக்கு எதிராக பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரி, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவைப் பரிசீலித்த நீதிவான் பசன் அமரசேன, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் சிறிலங்கா இராணுவ அதிகாரியான கேணல் முகமட் அன்சார் மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உடலகம ஆகியோருக்கு எதிராக பயணத் தடைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே தேசிய புலனாய்வு பணியகத்தின் முன்னைநாள் இயக்குனர் சுரேஸ் சால்ய கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது கோட்டபாயவிற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.